கொழும்பு பஞ்சிக்காவத்தை துப்பாக்கி சூடு ; சந்தேகநபர் சிக்கிய விதம்
கொழும்பு, மருதானை, பஞ்சிகாவத்தை பகுதியில் இன்று (6) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சில நிமிடங்களில் முகத்துவாரம் பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாளிகாவத்தை போதிராஜ மாவத்தையைச் சேர்ந்த 21 வயதுடையவர் என்றும், கெசல்வத்த கவி என்ற திட்டமிட்ட குற்றவாளியின் நெருங்கிய நண்பர் என்றும் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து முகத்துவாரம் பொலிஸின் 2 சார்ஜென்ட்கள் மற்றும் மற்றுமொரு பொலிஸ் அதிகாரியுடன் இணைந்து சந்தேகநபரை சுற்றிவளைத்துள்ளனர்.
சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்த நிலையில், சந்தேக நபர் கிம்புல எல பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் 3 பொலிஸாரும் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், அங்கு பதுங்கியிருந்த சந்தேகநபர் முச்சக்கரவண்டி ஒன்றில் தப்பிச் சென்றுள்ளார்.
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், அங்கு வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த மாதம்பிட்டிய பொலிஸாரின் உதவியுடன் அந்த முச்சக்கர வண்டியை நிறுத்தி சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைதானவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துப்பாக்கித்தாரியை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெசல்வத்த கவியின் அறிவுறுத்தலின் படி, வாழைத்தோட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஏற்றியதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் பின்னர், புறக்கோட்டை பகுதியில் அவர் இறங்கியதாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அத்துடன் துப்பாக்கித்தாரி தொடர்பில் தாம் வேறு எந்த தகவலையும் அறிந்திருக்கவில்லை எனவும் கைதான சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.