தேங்காய் தலையில் விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை பலி
இந்தியா கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தை தலையில் தேங்காய் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வழக்கம்போல் கடந்த 9-ம் திகதி காலை, சுசித்ரா தனது மகள் தியாவை பள்ளிப் பேருந்தில் ஏற்றி விடுவதற்காக வீட்டிலிருந்து அருகிலுள்ள தென்னந்தோப்பு வழியாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது 1½ வயது குழந்தை தக்ஷை கைகளில் ஏந்தியபடி அவர் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்றபோது, சுமார் 40 அடி உயர தென்னை மரத்தில் இருந்து திடீரென தேங்காய் ஒன்று கீழே விழுந்துள்ளது.
அதிவேகமாக விழுந்த அந்த தேங்காய், சுசித்ரா கையில் இருந்த குழந்தை தக்ஷின் தலையில் பலமாக தாக்கியுள்ளது. இதில் குழந்தையின் மண்டை ஓடு உடைந்து, பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடியதாக கூறப்படுகிறது.
இதைக் கண்ட குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் உடனடியாக குழந்தையை மீட்டு மணிப்பாலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி குழந்தை தக்ஷ் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் உடலைக் கண்டு பெற்றோர் கதறி அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவம் குறித்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.