இந்தியாவை அச்சுறுத்தும் ஒமைக்ரான்; அதிரடியாக விதிக்கப்பட்ட 144 தடையுத்தரவு!
உலகை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் இந்தியாவுக்குள்ளும் நுழைந்த நிலையில் மும்பையில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து துபாய் வழியாக மும்பையை அடுத்த கல்யாண் டோம்பிவிலிக்கு வந்த 33 வயது இன்ஜினீயர் ஒமைக்ரான் தொற்றால் கடந்த 4 ஆம் திகதி பாதிக்கப்பட்டமை கண்டறியப்பட்டது.
மேலும், நைஜீரியாவில் இருந்து புனேயை அடுத்த பிம்ப்ரி சிஞ்ச்வாட் நகரில் உள்ள சகோதரர் வீட்டுக்கு வந்த 44 வயது பெண், அவரது 2 மகள்களுக்கும் ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியானது.
இந்நிலையில் அவர்கள் மூலம் பெண்ணின் சகோதரர், அவரது 2 மகள்களுக்கும் தொற்று பரவியது. இதனால் ஒரே குடும்பத்தில் 6 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டனர். அத்துடன், புனே நகரில் ஒருவரும், மும்பையைச் சேர்ந்த 2 பேரும் ஒமைக்ரான் பிடியில் சிக்கியதால் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து இருந்தது.
இந்நிலையில் நேற்று, பச்சிளம் குழந்தை உள்பட மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் 3 பேர் மும்பையை சேர்ந்தவர்கள்.
4 பேர் புனே மாவட்டம் பிம்ப்ரி சிங்வாட் பகுதியை சேர்ந்தவர்கள். மும்பையை சேர்ந்த 3 பேரும் முறையே 49, 25, 37 வயதுடைய ஆண்கள் என்றும், இவர்கள் தான்சானியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சென்று திரும்பியவர்கள்.
இதேபோல புனே பிம்பிரி சிஞ்வாட்டில் பாதிக்கப்பட்ட 4 பேரும், ஏற்கனவே பாதிப்பு கண்டறியப்பட்ட நைஜீரியாவில் இருந்து வந்த 44 வயது பெண்ணின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள்.
இதில் 4 மாத பச்சிளம் குழந்தையும் அடங்கும் எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை தொற்று பாதித்த 4 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. 3 பேருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது.
மேலும் புதிய கண்டரியப்பட்ட பாதிப்புடன் சேர்த்து மகாராஷ்டிராவில் இதுவரை ஒமைக்ரானுக்கு ஆளானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மும்பையில் இன்று மற்றும் நாளை இரு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 144 உத்தரவு தடை அமலுக்கு வந்ததால் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் நடத்தவும், 4 நபர்களுக்கு மேல் ஒன்று கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.