யானைக்கால் நோய் பரிசோதனைக்காக இரவில் வரும் அதிகாரிகள்
யானைக்கால் நோய் பரிசோதனைகளுக்காக இரவு நேரங்களில் வீடுகளுக்கு வரும் பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆதரவளிக்குமாறு, யானைக்கால் நோய் ஒழிப்பு இயக்கத்தின் பணிப்பாளர் பிரசங்க சேரசிங்க மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த யானைக்கால் நோய் ஒழிப்பு இயக்கத்தின் பணிப்பாளர் பிரசங்க சேரசிங்க, "யானைக்கால் நோயைப் பொறுத்தவரை, ஒரு நோயாளி அறிகுறிகளுடன் எம்மிடம் வரும்போது, அவருக்கு (நோய் ஏற்பட்டு) 10, 15 அல்லது 20 வருடங்கள் கடந்துவிடுகின்றன.
வீதிகளில் நாம் காணும் கால்கள் வீங்கிய, விசேட உறுப்புகளில் வீக்கங்களுடன் மிகுந்த அசௌகரியங்களுடன் இருக்கும் ஒரு நோயாளி, மிகவும் காலம் கடந்தே அடையாளம் காணப்படுகிறார்.

இந்த நோயாளிகளை நாம் உண்மையில் அடையாளம் காண்பது, இரவு நேரங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் மேற்கொள்ளப்படும் விசேட இரத்தப் பரிசோதனைகள் மூலமாகும்.
இந்த வருடத்தில், சந்தேகத்திற்கிடமான மாவட்டங்களில் ஆரோக்கியமாகத் தோற்றமளிக்கும் நபர்களின் இரத்த மாதிரிகள் மூலம், எமது சூழலுக்குள் 27 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கைக்குள் இந்த நோய் முன்னர் பரவியிருந்த மற்றும் எமது பழைய தரவுகளின்படி அதிக ஆபத்துள்ள இடங்களையே நாம் சரியாக இலக்கு வைத்துச் செல்கிறோம். ஆனால், தற்போது எமக்கு ஒரு சிக்கல் உள்ளது. ஒருவிதமான தவறான முறையில் உருவாக்கப்பட்ட ஒலிப்பதிவு ஒன்று ஆங்காங்கே பரவி வருகிறது.
"இரவு நேரத்தில் இரத்தம் எடுக்க குழுக்கள் வருகின்றன, அவர்களுக்கு இரத்தம் கொடுக்க வேண்டாம், பிடித்து, அடித்து, கட்டி பொலிஸிடம் ஒப்படையுங்கள்" என்று, இவ்வாறான தவறான பிரச்சாரம் பரவுவதனால், நாம் இரவு நேரங்களில் செய்யும் இரத்தப் பரிசோதனைகளுக்கு பெரிய தடையாக உள்ளது.
எனவே, இதில் நாம் உண்மையில் சரியான அறிவித்தல்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் சுகாதார அதிகாரிகளின் அனுமதியுடன், அதற்காக அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் தமது உத்தியோகபூர்வ சீருடையில், அரச கடமைக்கான அடையாள அட்டையுடன் , முறையான அறிவித்தலுடன் செல்லும் ஒரு பயணமாகும். இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களின் உதவி தேவை."