சாதாரண தரப் பெறுபேறுகள் ; மாணவர்களின் மனநலனில் கவனம் செலுத்துங்கள் ; நிபுணர் அறிவுரை
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களின் மனநிலை மற்றும் எதிர்காலக் கல்வி நடவடிக்கைகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்த வேண்டியது அவசியம் என சிறுவர் மற்றும் இளைஞர் உளநல நிபுணர் பேராசிரியர் மியுர சந்திரதாச தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் உளநலனைப் பாதுகாக்கும் நோக்கில் பல முக்கிய ஆலோசனைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.
அதன்படி, தங்களது பிள்ளைகள் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர் என்பதற்காக, அதனை சமூக வலைத்தளங்களில் அளவுக்கு அதிகமாகப் பகிர்வதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான பதிவுகள், எதிர்பார்த்த பெறுபேறுகளைப் பெற முடியாமல் ஏமாற்றமடைந்துள்ள மாணவர்களுக்கு கூடுதல் மன உளைச்சலையும் துயரத்தையும் ஏற்படுத்தக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, நல்ல பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டுவதுடன், அவர்களின் எதிர்காலக் கல்வி மற்றும் தொழில் இலக்குகளுக்குத் தேவையான சரியான வழிகாட்டல்களையும் பெற்றோர் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சையில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை அல்லது தேர்ச்சி பெற முடியவில்லை என்பதற்காக மாணவர்கள் மனச்சோர்வடையக் கூடாது என வலியுறுத்திய அவர், ஒவ்வொருவருக்கும் பொருத்தமான துறையும் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பரீட்சையில் பின்னடைவைச் சந்தித்த மாணவர்கள், ஆசிரியர்கள், நிபுணர்கள் அல்லது அனுபவமிக்க பெரியவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்று, தங்களுக்குப் பொருத்தமான கல்வி அல்லது தொழிற்பயிற்சி சார்ந்த பாதைகளைத் தேர்ந்தெடுத்து முன்னேற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சாதாரண தரப் பெறுபேறுகள் எவ்வாறாக அமைந்திருந்தாலும், பிள்ளைகளின் உணர்வுகளையும் மனநிலையையும் புரிந்துகொண்டு அவர்களுக்கு உறுதுணையாக இருக்குமாறு பெற்றோரிடம் பேராசிரியர் மியுர சந்திரதாச கோரிக்கை விடுத்துள்ளார்.