வட மாகாணத்தில் தாதியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு
வட மாகாணத்தில் நாளை (12) காலை முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் வெளியேறும் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்பப் பதிவு புத்தகம் பயன்படுத்த வேண்டும் என்ற வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் 24 மணிநேரத்திற்கு இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், வட மாகாணத்தைத் தவிர ஏனைய மாகாண சபைகளிலோ அல்லது மத்திய அரசாங்கத்தின் வைத்தியசாலைகளிலோ இத்தகைய நடைமுறை அமுலில் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
வடமாகாணத்தில் மாத்திரம் இது தன்னிச்சையாக அமுல்படுத்தப்படுவது பாரதூரமான விடயமாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.