அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை ; PayPal தடைகளை நீக்க நடவடிக்கை
இலங்கைக்கு PayPal வசதியை அறிமுகப்படுத்துவது தொடர்பாக இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால தெரிவித்துள்ளார்.
நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியின் வங்கி மேற்பார்வை மற்றும் கொடுப்பனவு பிரிவுகளிடம் இது குறித்து வினவிய போது, உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

எனினும், இலங்கையிலுள்ள சில தனியார் வங்கிகள் PayPal தாய் நிறுவனத்துடன் இணைந்து, இதுவரையில் நடைமுறையில் இருந்த தடைகளை நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
"Inward Remittance" எனப்படும் இலங்கைக்கு வெளிநாட்டுப் பணத்தை நேரடியாகப் பெற்றுக்கொள்வதில் காணப்பட்ட தடைகளைத் தளர்த்துவதற்கான முயற்சிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
தற்போது இலங்கையில் முறையான PayPal வசதி இல்லாத காரணத்தினால், இணையவழியில் தொழில் செய்யும் பல உள்ளூர் முயற்சியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் போலி முகவரிகளையோ அல்லது வௌிநாடுகளில் உள்ள நண்பர்களின் முகவரிகளையோ பயன்படுத்தி கணக்குகளை நிர்வகித்து வருகின்றனர்.
இதன் காரணமாக இலங்கைக்கு கிடைக்க வேண்டிய வெளிநாட்டு செலாவணி பெருமளவில் இழக்கப்படுவதாக செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இந்த வசதி முறையாக அறிமுகப்படுத்தப்பட்டால் பின்வரும் நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: இணையவழியில் வர்த்தகம் செய்வோர் தமது வருமானத்தை முறையான வழியில் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்தோடு, சாதாரண நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் தமது கொடுக்கல் வாங்கல்களை விரைவாக மேற்கொள்ள வழிவகுக்கும்.
முறையற்ற பணப்பரிமாற்ற முறைகளான உண்டியல் போன்றவை தவிர்ந்து, அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிப்படையான கட்டமைப்புக்குள் நிதி நடவடிக்கைகள் இடம்பெறும்.
மேலும், இதன் மூலம் வரி வருமானங்களைக் கணக்கிடுவதில் அரசாங்கத்திற்கும் சாதகமான சூழல் ஏற்படும்.
இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறை விதிகளுக்கு அமைய இந்த வசதி நடைமுறைக்கு வரும் பட்சத்தில், அது வாடிக்கையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் பெரும் வசதியாக அமையும் என செயலாளர் வருண ஸ்ரீ தனபால மேலும் தெரிவித்தார்.