இந்து கலாசார திணைக்களத்துக்கு 2027 பட்ஜெட்டில் கூடுதல் நிதி கோரிக்கை
இந்து கலாசார திணைக்களத்தின் பணிகளை மேலும் பலப்படுத்தி, ஆலய வளர்ச்சி மற்றும் மாணவர்களுக்கான பயிற்சிகளைத் தீவிரப்படுத்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் நிதியை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இந்து கலாச்சார திணைக்களத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
வரும் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்த நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்கத் தேவையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் திணைக்களத்தின் ஊடாக ஆலயங்களுக்கான நிதி உதவிகள், பல்வேறு சமயச் செயற்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் தமக்குரிய அமைச்சுப் பொறுப்புகளுக்கு அப்பாலும், இந்து கலாசார திணைக்களத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் திறம்படச் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் செயற்பாடுகளை மேலும் உறுதியோடும் பலத்தோடும் முன்னெடுத்துச் செல்வதே முதன்மை நோக்கமாகும்.
எனவே வரவிருக்கும் நிதியொதுக்கீட்டின் மூலம் திணைக்களத்தின் திட்டங்களை விரைவுபடுத்தி, சமய மற்றும் பண்பாட்டுச் செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.