பாம்பு தீண்டினால்கூட நாட்டில் மருந்து இல்லை!
நாட்டில் விஷப் பாம்பு தீண்டினால் ஏற்றப்படும் ஊசி மருந்துகூட இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் 52 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நாடாளுமன்றத்தில் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தேன். அவற்றில் 32 வகையானவை அத்தியாவசிய மருந்துகளாகும். இந்நிலையில் தற்போது நாட்டில் தட்டுப்பாட்டு நிலைமை அதிகரித்துள்ளது.
ஆனால் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என அச மருந்தாக்கல் கூட்டுதாபனம் கூறுகின்றது. உண்மை நிலைவரம் மருந்து களஞ்சிய பிரிவுக்கே தெரியும் எனவும் அவர் கூறினார்.
குறிப்பாக விஷப் பாம்பு தீண்டினால், நோயாளி வைத்தியசாலைக்கு கொண்டுவந்த உடனேயே அவரின் உயிரை பாதுகாப்பதற்கு ஏற்றப்படும் ‘என்டி வெனம்’ என்ற ஊசி மருந்துகூட நாட்டில் இல்லை.
எனவே, விஷப் பாம்பு தீண்டி வைத்தியசாலைக்கு சென்றால் உயிரிழக்க வேண்டிய நிலைமையே தற்போது காணப்படுகின்றதாகவும் அவர் கூறினார். அதுமாத்திரமல்லாமல் உரப்பிரச்சினையால் விவசாயிகள் விவசாயம் செய்வதில்லை. வயல் நிலங்கள் காடாகியுள்ளது.
தேயிலை தோட்டங்களும் காடாகியுள்ளன.
எனவே, இனி பாம்பு தீண்டல்களும் அதிகரிக்கும் என குறிப்பிட்ட ராஜித சேனாரத்ன, நாட்டில் மருந்து இல்லை, டொலர் இல்லை என கூறும் நிலையிலும் அமைச்சர்கள் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல தயாராவதாகவும் குறிப்பிட்டார்.