இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் ; கொழும்பில் தீவிரமான பாதுகாப்பு
நுகேகொடை மற்றும் கொஹுவல சந்திப்புக்கு இடையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, கொழும்பு நகரம் முழுவதும் பொலிஸார் கூடுதல் உத்தியோகத்தர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
நேற்று இரவு 8:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், 25 வயதுடைய இளைஞர் ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக கொழும்பு களுபொவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளதால், பொலிஸார் களனி பாலம் வரையிலான பகுதிகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேக நபரை தேடிக் கண்டுபிடிக்கும் நோக்கில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறித்த பகுதிகளில் பயணிக்கும் போது அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்கிசை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மற்றும் கொஹுவலை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.