அடுத்தவர் மரணத்தில் மகிழ்ச்சியை அனுபவிக்கும் இலங்கையர்கள் ; விமலவீர திசாநாயக்க காட்டம்
மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் மகிழ்ச்சியை அனுபவிப்பவர்கள் முற்றிலும் மனச்சாட்சியற்ற, இரக்கம் இல்லாதவர்களாவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார்.
நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நேற்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். பொருளாதார நெருக்கடிக்கு அப்பாலான மனிதாபிமான நெருக்கடி எமது நாட்டில் உருவாகியுள்ளது.
மற்றவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது மகிழ்ச்சியில் குதூகளித்து, பட்டாசு வெடித்து, இனிப்பு பண்டங்கள் தயாரித்து, பாற்சோறு சமைத்து கொண்டாடும் வகையில் இந்த அரசியல் கலாசாரம் மாறியுள்ளது.
சனத் நிஷாந்த எம்.பியின் அகால மரணத்தை அநேகமானவர்கள் கொண்டாடினார்கள். ஆனால், புத்தளம் மாவட்ட மக்களினதும் நாட்டிலுள்ள இலட்சக்கணக்கான உணர்வுபூர்வமான மக்களின் பங்கேற்புடனும் அவர் இறுதிப் பயணம் சென்றார்.
மே தினக்கூட்டத்தில் ரணசிங்க பிரேமதாச மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, அவரால் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட உதா கமவிலிருந்த சிலர் கூட, இனிப்பு பண்டங்கள் தயாரித்து உண்டு மகிழ்ந்தார்கள்.
இதுவே, இந்த முட்டாள்தனமான செயற்பாடு தொடர்பில் எனக்கு கிடைத்த முதல் அனுபவமாகும்.
பிரபாகரன் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்திலும் கூட வீதிக்கு வீதி பாற்சோறு சமைத்து கொண்டாடினார்கள்.
மற்றையவரின் மரணத்தில் மகிழும் மனநிலை கொண்ட மக்களே இந்த நாட்டில் இருக்கிறார்கள்.
அதுவே 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதியும் இடம்பெற்றது. அவரின் குடும்பம் வர்த்தகப் பின்னணியை கொண்டதாகும். அதேபோன்றும், அரசியலுக்காக அவரின் குடும்பம் உயிர்த்தியாகமும் செய்துள்ளது.