யாழ்ப்பாணத்தில் 170 மில்லியன் செலவில் புதிய விளையாட்டரங்கு
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்கும், அத்தியாவசிய விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளித்து, புதிய விளையாட்டரங்கு நிர்மாணிகப்படவுள்ளது.

இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியமான பொழுதுபோக்கு
வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் உள்ளக விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்வதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேசைப் பந்து, டென்னிஸ், பூப்பந்து, வலைப்பந்து, மற்றும் சதுரங்கம் போன்ற உள்ளக விளையாட்டுகளுக்குத் தேவையான வசதிகள் இந்த விளையாட்டரங்கில் ஏற்படுத்தப்படவுள்ளன.
இதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த நவீன உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு 170 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்கத்தில் இந்த நடவடிக்கையால் வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத் திறமைகளை வளர்ப்பதற்கும், இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியமான பொழுதுபோக்குகளை ஊக்குவிப்பதற்கும் இந்த உள்ளக விளையாட்டரங்கு ஒரு முக்கிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.