நாட்டில் அமுல்படுத்தப்படவுள்ள புதிய சட்டங்கள்?
நாட்டில் தற்போது அமுலில் உள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாத நிலையில், சட்டங்களை வலுப்படுத்துவதன் மூலமாகவோ, அல்லது இனவாதத்தைத் தோற்கடிப்பதன் மூலமாகவோ, தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கல்னேவ - மகாவலி மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். நாட்டு மக்களிடையே தற்போது இனவாதம் இல்லாது போயுள்ளது.
இருப்பினும், அதிகார பலத்தினை கைப்பற்றுவதற்காகச் சிலர் இனவாதத்தைத் தலைதூக்கச் செய்கின்றனர். அதிகார பலத்தினை இழக்கும் போது, அதனை மீண்டும் கைப்பற்றுவதற்காக அவர்கள் இனவாதத்தைக் கையில் எடுக்கின்றனர்.
இவர்களால் உருவாக்கப்படும் இனவாதத்திற்கு பலிக்கடாவாக்கப்படுவது அப்பாவி பொதுமக்களேயாகும்.
இந்தநிலையில், அனைத்து தரப்பினரும் ஜனநாயக ரீதியிலும் சுதந்திரமாகவும் செயற்படுவதற்கு இடமளிக்கப்படும். ஆனால், இனவாதம் தலைதூக்குவதற்கு ஒருபோதும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.