விவசாயிகளுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் ; பல பயிர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு
விவசாயம் மற்றும் விவசாயக் காப்பீட்டுச் சபை, பயிர் இழப்புகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி பயிர் செய்கையை உள்ளடக்கிய ஒரு புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டம், விவசாயத் திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்ட சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, பீட்ரூட், முட்டைக்கோஸ், கேரட், லீக்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரை, குடைமிளகாய், தக்காளி, பாகற்காய் மற்றும் பூசணி உள்ளிட்ட பயிர்களை உள்ளடக்கும்.

ஆரம்பக் காப்பீட்டுத் தொகையில் 7% கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் விவசாயிகள் இக்காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெறலாம் என்று சபை தெரிவித்துள்ளது.
இயற்கைப் பேரழிவுகள், கட்டுப்படுத்த முடியாத தாவர நோய்கள், பூச்சிகளால் ஏற்படும் சேதங்கள் மற்றும் காட்டு யானைகளின் தாக்குதல்களால் ஏற்படும் இழப்புகளுக்கு இத்திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.
விவசாயத் துறையில் ஏற்படும் அபாயங்களைக் குறைத்து, நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்துவதன் மூலம், விவசாயிகள் தொடர்ந்து பயிர் செய்கை செய்வதை ஊக்குவிப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்று வேளாண்மை மற்றும் விவசாயக் காப்பீட்டுச் சபை தெரிவித்துள்ளது.