மன்னார் மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம்
மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கனகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
1998 முதல் 2003 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆசிரியராகப் பணியாற்றிய அவர், 2003 முதல் 2004ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் வரை நிர்வாக சேவைக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பின்னர், 2004 ஒக்டோபர் முதல் 2015ஆம் ஆண்டு மே மாதம் வரையில் தொழில் திணைக்களத்தின் பிரதி தொழில் ஆணையாளராக அவர் பணியாற்றியுள்ளார்.
தொடர்ந்து, பிரதேச செயலாளராகவும், 2019 ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.
பின்னர் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகப் பணியாற்றிய கே.கனகேஸ்வரன் நிர்வாக சேவை விசேட தரத்துக்குத் தேர்வாகி, வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக பணியாற்றி வருகின்றார்.
இந்தநிலையில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக நாளை மறுதினம் அவர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.