சுற்றாடல் சார் தீர்மானமிக்க பொறுப்புக்கள் இளைய சமூகத்திடமுள்ளது - சாகல ரத்நாயக்க
சுற்றாடலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் தீர்மானமிக்க பொறுப்புக்கள் இளம் சமூகத்தினரை சார்ந்துள்ளதென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உலகளாவிய காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்காக இலங்கை முன்நின்று செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், சுற்றாடலுக்காக இளம் சமூகத்தினரின் அர்பணிப்புக்களையும் பாராட்டியுள்ளார்.
இளம் தலைவர்களைப் பாராட்டுவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் (20.12.2023) நடைபெற்ற நிகழ்விலேயே தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வானது பல்வேறு துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்திய இளம் தலைவர்கள் பாராட்டுவதற்காக லியோ கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பசுமை மற்றும் நவீன பொருளாதாரம்
மீள்புதுப்பிக்கத் தக்க வலுசக்தி துறைக்குள் இலங்கையின் கொள்ளளவு தொடர்பில் சுட்டிகாட்டிய அவர் பசுமை மற்றும் நவீன பொருளாதாரத்திற்கான ஜனாதிபதியின் தெரிவு தொடர்பிலும் விளக்கமளித்துள்ளார்.
நெருக்கடி நிலையிலிருந்து மீள எழுவதற்கான முயற்சிகளின் போது முகம்கொடுக்க நேர்ந்த சவால்களைப் போன்று நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
7BL17YJ
நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக இளைஞர் யுவதிகள் முன்னெடுக்கும் பணிகள் தொடர்பில் நினைவுகூர்ந்த அவர், அதற்கான ஒத்துழைப்புக்களுக்காகவும் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு நிலையான ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.