ஐபோன் பயனர்களின் வட்ஸ்அப் கணக்குகளை முடக்கும் புதிய இணையவழி தாக்குதல்
இலங்கையிலுள்ள ஐபோன் பயனர்களின் வட்ஸ்அப் (WhatsApp) கணக்குகளை இலக்குவைத்து 'ஸீரோ க்ளிக்' (Zero-click) வகையிலான புதிய இணையவழி தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழுவுக்கு (SLCERT) முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பாதிக்கப்பட்ட நபர் எந்தவொரு போலி இணைப்புகளையும் (Links) சொடுக்காத நிலையிலும் அல்லது QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாத நிலையிலும், அவர்களின் வட்ஸ்அப் கணக்குகளை இணைய ஊடுருவிகள் (Hackers) தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வகையில் இந்தத் தாக்குதல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய iOS பதிப்புகளில் இயங்கும் ஐபோன்களே இந்தத் தாக்குதலினால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், இலங்கையின் ஊடகவியலாளர்கள் மற்றும் வர்த்தகச் சமூகத்தைச் சேர்ந்த பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு ஊடுருவப்பட்ட வட்ஸ்அப் கணக்குகள் மூலம் மற்றவர்களுக்குப் பணமனுப்புமாறு கோரி போலிச் செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
iOS 16.7.12 க்கும் பழைய பதிப்புகளைப் பயன்படுத்தும் ஐபோன் பயனர்களே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க ஐபோன் பயனர்கள் உடனடியாகத் தமது தொலைபேசிகளின் iOS பதிப்பையும், வட்ஸ்அப் செயலியையும் அண்மைய பதிப்புக்கு புதுப்பிக்குமாறு (Update) இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன், வட்ஸ்அப் கணக்குகளில் இருபடிச் சரிபார்ப்பு (Two-Step Verification) மற்றும் 'செட் லாக்' (Chat Lock) ஆகிய பாதுகாப்பு அம்சங்களை உடனடியாகச் செயற்படுத்துமாறும், தெரிந்த நபர்களிடம் இருந்து பணக் கோரிக்கைகள் வந்தால் தொலைபேசி அழைப்பு மூலம் அதனை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.