அரச நிறுவனங்களில் இன்று முதல் அமுலாகும் வகையில் புதிய தடை
அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும், பயன்படுத்துவதுவதற்கும் இன்றுடன் (31) தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக, அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கடந்த 15ஆம் திகதி விசேட சுற்றறிக்கை ஒன்றின் ஊடாக இது குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சுற்றறிக்கை அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் விதிகளுக்கு உட்பட்ட சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறிக்கப்பட்ட சுற்றறிக்கையின்படி, மே மாதம் 31ஆம் திகதியான இன்று முதல் அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை வாங்குவதும் பயன்படுத்துவதும் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நிறுவனங்களுக்குள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு, அனைத்து நிறுவனத் தலைவர்களும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய சுற்றறிக்கைக்கு மேலதிகமாக, கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச நிர்வாக சுற்றறிக்கையின் விதிகளும் தொடர்ந்து செல்லுபடியாகும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களும் "3R" கருப்பொருளுக்கு இணங்கச் செயல்பட வேண்டும்.
குறைத்தல் (Reduce)
மறுபயன்பாடு (Reuse)
மீள்சுழற்சி (Recycle)
இந்தச் சுற்றறிக்கையானது மத்திய சுற்றாடல் அமைச்சின் உடன்பாட்டுடன் வெளியிடப்பட்டுள்ளதாக அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.