பெண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய முன்னேற்றம் ; 5 மம்மோகிராபி இயந்திரங்கள் அரச மருத்துவமனைகளுக்கு
இலங்கையின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக 5 நவீன மம்மோகிராபி (Mammography) பரிசோதனை இயந்திரங்களை முக்கிய அரச மருத்துவமனைகளுக்கு அறிமுகப்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்றைச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு ஆரம்பித்துள்ளது.
மொத்தமாக 765 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த நவீன மருத்துவ உபகரணங்கள், கொழும்பு தேசிய மருத்துவமனை , காலி கராப்பிட்டிய தேசிய மருத்துவமனை, கண்டி தேசிய மருத்துவமனை, அனுராதபுரம் போதனா மருத்துவமனை மற்றும் மஹரகம அபேக்ஷா புற்றுநோய் மருத்துவனை ஆகியவற்றுக்கு வழங்கப்படவுள்ளன.
மார்பகப் புற்றுநோய்
இந்தத் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்டுள்ள ஒரு இயந்திரத்தின் பெறுமதி 153 மில்லியன் ரூபாவாகும். ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் கூடிய 'சுகாதாரத் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்' (Health System Enhancement Project) ஊடாக இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கு மத்தியில் மிகவும் பொதுவான புற்றுநோய் பாதிப்பாகக் காணப்படும் மார்பகப் புற்றுநோயை, ஆரம்ப கட்டத்திலேயே மிகவும் துல்லியமாகக் கண்டறிவதற்கும், அதற்கான தொடர் சிகிச்சைச் சேவைகளை வலுப்படுத்துவதற்கும் இந்த புதிய தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இவற்றுக்கு மேலதிகமாக, திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைகளின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இரண்டு மம்மோகிராபி இயந்திரங்களை அங்கு நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதிலும் உள்ள அரச மருத்துவமனைகளில் 16 மம்மோகிராபி இயந்திரங்கள் மாத்திரமே பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்த புதிய சேர்க்கைகளுடன் அதன் மொத்த எண்ணிக்கை 23 ஆக அதிகரிக்கவுள்ளன.
நாடு முழுவதும் உள்ள முக்கிய போதனா மற்றும் பொது மருத்துவமனைகளில் தற்போது இச்சேவை வழங்கப்பட்டு வந்தாலும், இதற்கான கேள்வி அதிகமாகக் காணப்படுவதால் நோயாளர்கள் வாரக் கணக்கில் அல்லது மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டது.
இந்த புதிய இயந்திரங்களின் வருகையினால் நோயாளர்களின் காத்திருப்பு நேரம் குறைவடைவதுடன், பொதுச் சுகாதாரத் துறையில் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளின் தரம் மற்றும் வேகம் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.