கடற்படையின் அராஜகம் அரசாங்கத்தின் உண்மை தன்மையை வெளிக்காட்டியுள்ளது; சார்ள்ஸ் நிர்மலநாதன்
மன்னார் வங்காலைபாடு கிராமத்தில் இருந்து கடற்றொழிலுக்கு நேற்று நள்ளிரவு சென்று வந்த கிராமத்தவர் ஒருவரை, மதுபோதையில் இருந்த கடற்படையினர் வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த கிராம சேவகர் ஒருவர், அவரை ஏன் தாக்குகின்றீர்கள் என கடற்படையினரிடம் வினவியபோது, 10க்கும் மேற்பட்ட கடற்படையினர் சேர்ந்து கிராம சேவகரையும் தாக்கியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்க சென்றபோது, அவர்கள் முறைப்பாட்டை ஏற்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் உடனடியாக அவர்களின் உடல்நலம் கருதி பேசாலை வைத்தியசாலையில் ஏனையோர் அனுமதித்த நிலையில் தாக்குதலுக்குள்ளனவர்கள், மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ,
“கடற்படையினரின் இந்த அராஜகமானது தற்போது இருக்கும் அரசாங்கத்தின் உண்மையான மனநிலையை வெளிக்காட்டியுள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன் இந்த தாக்குதல் சம்பவமானது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


