அனர்த்த பாதிப்பு தொடர்பில் உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு விசேட போக்குவரத்துத் திட்டம்
கண்டி, கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையால் தடங்கல்களை எதிர்கொண்டுள்ள உயர்தரப் பரீட்சார்த்திகள், உரிய மாற்று வீதிகள் ஊடாக தமது பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதற்காக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியன இணைந்து விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றை செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.
மேலும், திடீர் வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்த சந்தர்ப்பங்களில் பரீட்சார்த்திகள் தமது பரீட்சை நிலையங்களுக்குச் செல்லத் தேவையான வசதிகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஊடாக வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை நடைபெறும் நாட்களில், மேற்குறிப்பிட்டவாறு மாற்றுப் போக்குவரத்து வசதிகளைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத பரீட்சார்த்திகள் யாரேனும் இருப்பின், அருகிலுள்ள வலயக் கல்வி அலுவலகத்தை அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்தச் சீரற்ற வானிலை நிலவும் காலப்பகுதியில் பரீட்சை நிலையங்களுக்கு முன்னதாகவே வருகை தரத் திட்டமிடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர அழைப்பு எண்: 117
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உடனடி அழைப்பு எண்: 1911