தமிழர் பகுதியொன்றில் கனமழை ஓய்ந்து ஒரு மாதம் கடந்தும் நிலவும் அவலநிலை!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, தேராவில் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கனமழை ஓய்ந்து ஒரு மாதம் கடந்தும் இன்றும் வீடுகளுக்கு திரும்பமுடியாத அவல நிலையில் சிக்கியுள்ளனர்.
குறித்த பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேராவில் குளத்தின் மேலதிக நீர் வெளியேறுவதற்கான வழிகள் மறிக்கப்பட்ததால் குளத்தின் நீர் நிரம்பியுள்ளது.
புதிய வீதி அமைக்கும்போது மேலதிக நீர் வீதியை குறுக்கறுத்து செல்வதற்கான பாலம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் அமைக்காததன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவத்தால் சிறியவர்கள், முதியவர்கள் உள்ளடங்கலாக பாடசாலையில் வாழ்ந்து வரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தேராவில் குளக்கரையினை அண்மித்த 10ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
வீதிகளில் குளத்து நீர் நிரம்பி காணப்படுவதால் போக்குவரத்து செய்வதிலும் மக்கள் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
இவ்வாறான நிலையில், நீரை விரைவாக அகற்றி தமது போக்குவரத்து பாதைகளை பயன்படுத்த ஆவண செய்யுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.