மாணவன் மீது அமைச்சர் மகன் கொலைவெறித்தாக்குதல்!
கிரிபத்கொடையில் உள்ள பிரபல பயிற்சி வகுப்புக்கு வந்த மாணவன் மீது நேற்றுமுன்தினம் (26ஆம் திகதி) இரவு 7.30 மணியளவில், கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்த்திருக்க டிஃபெண்டர் வாகனங்களில் வந்து தன்னை அமைச்சரின் மகன் என கூறிக்கொண்ட இளைஞன் உள்ளிட்ட குழுவினர் இந்தத் தாக்குதல் நடத்தியுள்ளனர் .
சுமார் 20 பேர் கொண்ட கும்பல்
சுமார் 20 பேர் கொண்ட கும்பல் குறித்த மாணவனை இரத்தம் வரும் வரை தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களைத் தவிர, கருப்பு உடை அணிந்த உயரடுக்கு பாதுகாவலர்கள் குழு டிஃபெண்டர் வாகனங்களில் வந்து அருகில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது .
காதலிக்கு கடிதம்
குறித்த மாணவன் அமைச்சரின் மகன் என கூறிக்கொண்ட இளைஞனின் காதலிக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளதாகவும் இதன் காரணமாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கடுமையான தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் குறித்து, பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவிற்கும், கிரிபத்கொட பொலிஸாருக்கும் அங்கிருந்தவர்கள் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஐம்பது மீற்றர் தூரத்தில் இந்த வகுப்பு அமைந்துள்ளபோதும் தாக்குதலை தடுக்க பொலிஸார் விரைந்து வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வேடிக்கை பார்த்த பொலிஸார்
வாகனங்களில் பயணித்தவர்கள் கூட வாகனங்களை நிறுத்திவிட்டு தாக்குதலை வேடிக்கை பார்த்துள்ளனர் . கடைசி நேரத்தில் கைத்துப்பாக்கிகளுடன் சிவில் உடையில் சுமார் ஏழு பொலிஸார் அங்கு வந்தபோது, தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன பேட்டியளித்துள்ளார்.
அதேவேளை களனியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் மகன் சம்பவத்தின் போது இருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.