குற்றவாளிகளுடன் தொடர்பினை பேணும் இராணுவ வீரர்களுக்கு எச்சரிக்கை
குற்றவாளிகளுடன் தொடர்பில் ஈடுபடும் இராணுவ வீரர்களை அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொண்டா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாதாள உலக கும்பலுடன் தொடர்பு
பொருளாதார நெருக்கடி மற்றும் போதைப்பொருள் பழக்கம் காரணமாக வீரர்கள் குற்றவாளிகளுடன் தொடர்பில் ஈடுபடுவதாக கூறிய அவர் எதிர்காலத்தில் அந்த வீரர்களை அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆயுதப் பயிற்சி பெற்ற பின்னர் சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பல நபர்கள் பாதாள உலக கும்பலுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தகைய நபர்களைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், ஆயுதப் பயிற்சி பெற்று இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை மிகக் குறுகிய காலத்தில் கைது செய்யும் திறன் இராணுவத்திற்கும் காவல்துறைக்கும் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.