இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பொறுப்பேற்ற மிலிந்த மொரகொட
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொரகொட நேற்று புதுடில்லியில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் வைத்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதுடன், இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் நற்சான்றுப்பத்திரத்தையும் கையளித்தார்.
இந்நிகழ்வின் போது பதில் உயர்ஸ்தானிகர் நிலுக கதுருகமுவ உள்ளிட்ட இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளின் வரவேற்பையும் மதவழிபாடுகளையும் தொடர்ந்து மிலிந்த மொரகொட இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராகக் கடமைகளைப் பொறுப்பேற்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டார்.
இதன்போது 2021 - 2023 ஆம் ஆண்டு வரையான மிலிந்த மொரகொடவின் பதவிக்காலத்தின் போது முன்னெடுக்கப்படவுள்ள இந்திய - இலங்கை தூதுக்குழு தொடர்பான ஒன்றிணைந்த தேசிய மூலோபாயமும் பகிரங்கப்படுத்தப்பட்டது. அந்த தேசிய மூலோபாயத்தில் இந்திய - இலங்கை தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தூரநோக்கு அடிப்படையிலான திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
மேற்படி தேசிய மூலோபாயத்தில் தூதுக்குழுவின் உபாயங்களும் அதன் அடிப்படைகள் மற்றும் நோக்கங்களும் ஒரு பிரிவாகவும் ஒவ்வொரு நோக்கங்களையும் அடைந்துகொள்வதற்கான செயன்முறைகளின் அமுலாக்கம் மற்றொரு பிரிவாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதன்படி தூதுக்குழுவின் 7 அடிப்படைகளும் அதன்கீழான 30 நோக்கங்களும் தேசிய மூலோபாயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இருநாடுகளுக்கும் இடையிலான அரசியல் தொடர்புகளை வலுப்படுத்தி, இருதரப்பு நல்லுறவை ஓர் கட்டமைப்பு ரீதியான மட்டத்திற்குக் கொண்டுவருதல், வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்தல், நாட்டிற்கான ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்களும் அதில் அடங்கியுள்ளன.
மேலும் இருநாடுகளுக்கும் பொதுவான இந்துசமுத்திரப் பாதுகாப்பு, இலங்கையின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்வதற்கான நடைமுறைகள் ஆகியவை குறித்தும் தேசிய மூலோபாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது , தற்போதைய நெருக்கடிநிலைக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் தூதுக்குழுவின் பிரதிநிதிகளுக்குத் தனது பாராட்டை மிலிந்த மொரகொட வெளியிட்டார்.