கடல்சார் முற்றுகை ; அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான் ஆயுதப்படை!
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை தொடருமானால், அது தற்போதைய போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயல் என ஈரான் ஆயுதப்படை எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கையை ஈரானின் ஆயுதப் படைகளை ஒருங்கிணைக்கும் உயர்மட்ட அமைப்பான 'காதம் அல்-அன்பியா' (Khatam al-Anbiya) மத்திய தலைமையகத்தின் தளபதி அலி அப்துல்லாஹி விடுத்துள்ளார்.

இரண்டு வார கால போர்நிறுத்தம்
ஈரானின் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்கு அமெரிக்கா அச்சுறுத்தலை ஏற்படுத்தினால், அது போர்நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என அப்துல்லாஹி குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் முற்றுகைக்குப் பதிலடியாக, பாரசீக வளைகுடா, ஓமான் கடல் மற்றும் செங்கடல் ஆகிய பகுதிகளில் எவ்விதமான ஏற்றுமதி அல்லது இறக்குமதி நடவடிக்கைகளையும் அனுமதிக்கப்போவதில்லை என ஈரான் ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன.
கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கையில், முதல் 24 மணிநேரத்தில் எந்தவொரு கப்பலும் ஈரானியத் துறைமுகங்களைக் கடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ஓமான் வளைகுடாவில் ஆறு வர்த்தகக் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதுடன், இந்த உடன்படிக்கை எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளில் எந்தவித முடிவுகளும் எட்டப்படாத போதிலும், அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்க வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.