பெண் குளிப்பதை பதிவு செய்து தோழிக்கு அனுப்பிய தமிழர் பகுதி நபருக்கு கொழும்பில் பிறப்பிக்கபட்ட உத்தரவு
அண்டை வீட்டுப் பெண் குளிப்பதை ரகசியமாகக் காணொளி பதிவு செய்து, அதனை அப்பெண்ணின் தோழிக்கு அனுப்பியதாகக் கூறப்படும் நபரை, வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிபதி உத்தரவிட்டார்.
கொழும்பு 7 பகுதியில் வாடகைக்கு வசித்து வரும் இளம் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

திருட்டுத்தனமாகப் பதிவு
சந்தேக நபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் தனது குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது, சந்தேக நபர் தனது கைபேசியைப் பயன்படுத்தி அதனைத் திருட்டுத்தனமாகப் பதிவு செய்துள்ளார்.
பின்னர், அந்தத் தர்மசங்கடமான காணொளியை பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழி ஒருவருக்கு அனுப்பியுள்ளார்.
தனது தோழி மூலமாகவே இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அறிந்துள்ளார். உடனடியாகச் சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்ற அவர், அங்கிருந்த நபரைச் சத்தமிட்டு எச்சரித்ததுடன், அவரது கைபேசியையும் உடைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இருதரப்பு வாதங்களையும், பொலிஸார் சமர்ப்பித்த ஆதாரங்களையும் ஆராய்ந்த நீதிபதி, சந்தேக நபரை எதிர்வரும் மே 4 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.