தமிழர் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்ற நபர் கைது
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட திரவந்தியமோடு பகுதியில், கடமையில் இருந்த காவல்துறையினரை அச்சுறுத்தி அவர்களது துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் 44 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் தனது மனைவியை தாக்கியதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், சந்தேகநபரை கைது செய்ய முற்பட்டுள்ளனர்.
அந்தச் சந்தர்ப்பத்தில், சந்தேகநபர் காவல்துறையினரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்று குழப்பத்தை ஏற்படுத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மேலதிக காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் சந்தேகநபர் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு கைது செய்யப்பட்டதுடன், துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது காயமடைந்த காவல்துறையினர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக கல்முனை காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, கைது செய்யப்பட்டவர் 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.
காவல்துறையின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் காவல்துறையினரை தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கல்முனை காவல்துறை தெரிவித்துள்ளது.