மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் ; பலநாள் மீன்பிடிப் படகின் உரிமையாளரும் கைது
சுமார் 150 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தி வந்த விவகாரத்தில், 'தெனுவன் புதா' என்ற பலநாள் மீன்பிடிப் படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (17) காலை டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்தப் படகிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி 400 கோடி ரூபாவிற்கும் அதிகமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

மேலதிக விசாரணை
முன்னதாக, கடந்த 13ஆம் திகதி நடுக்கடலில் வைத்து படகோட்டி உட்பட நான்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்தே படகின் உரிமையாளர் தற்போது பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள 'பொல் அத்துமோதர சரத்' எனும் கடத்தல்காரரின் ஒருங்கிணைப்பில், ஈரானியக் கப்பல் ஒன்றிலிருந்து பெறப்பட்ட இந்தப் போதைப்பொருளை இலங்கைக்குக் கொண்டு வருவதற்காக படகு உரிமையாளர் மற்றும் மீனவர்களுக்கு 20 கோடி ரூபா வழங்க இணக்கம் காணப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், குறித்த படகு அண்மையில் 40 இலட்சம் ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.