வெற்றிலை மென்றவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் வெற்றிலை மென்றபடி வெதுப்பக வண்டியினைச் செலுத்தி வந்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து வெதுப்பக உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் கூட்டம் கடந்த மாதம் இடம்பெற்றிருந்தது.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஊடாக சட்ட நடவடிக்கை
இதன்போது, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் ஆலோசனைக்கமைய, சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றியே வியாபாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வெற்றிலை மென்றபடி வெதுப்பக வண்டியினைச் செலுத்தி வந்தவருக்கு எதிராக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஊடாக தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வண்டியின் சாரதியிடம் மருத்துவச் சான்றிதழ் இல்லாமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தோடு, சினிமா பாடல்களை அதிக ஒலியுடன் ஒலிக்கச் செய்து செல்வதால் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுகின்றன.
இதன் காரணமாக வெதுப்பக வண்டிகளுக்கென்று பிரத்தியேகமான ஒலி (Jingle) வழங்கப்பட்டிருந்தது. எனினும், அதனை மீறிச் செயற்பட்டமைக்காகவும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஊடாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருப்பினும், அவர்களுக்கு எதிராகப் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார்.