விடுதலைப் புலிகளின் தலைவராலேயே தலைவர்களும், முக்கியஸ்தர்களும் கொல்லப்பட்டனர்! சபையில் டக்ளஸ் (Video)
தம்முடைய தலைவர்கள், சகாக்கள், உறுப்பினர்கள் யாரால் கொல்லப்பட்டார்களோ அவர்களையே தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் கொண்டாடிக் கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சபையில் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள், அரசியல் உரிமை தொடர்பிலான பிரச்சினைகள், அரசியல் கைதிகள் தொடர்பிலான பிரச்சினை, காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பிலான பிரச்சினை, சொந்த காணி நிலங்கள் கைக்கு எட்டாமை தொடர்பான பிரச்சினை என பிரச்சினைகளையே வாழ்க்கையாக கொண்டிருக்கும் எமது மக்களுக்கு பத்தோடு பதினொன்றாவதாக தற்போது பொருளாதார பிரச்சினை காணப்படுகிறது.
தொடரும் ஜெனிவா காட்சிகள்
இந்த பிரச்சினைகள் யாவும் முன்னுரிமை வழங்கப்பட்டு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள். ஆனால் முதலாம் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என தொடரும் திரைப்படங்கள் போன்று மீண்டும் இங்கே ஜெனிவா காட்சிகள் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சக தமிழ் இயக்கங்களின் அரசியல் கட்சிகள் அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்ததாக கூறப்படுகின்ற பல குழுக்கள் இருப்பினும் அவை அரசியல் கட்சிகளாக பதிவில் இல்லாத காரணத்தால் ஏனைய சக இயக்கங்களினது அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் என பலரும் கொல்லப்பட்டமை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனால் தான் என்பதை இங்கு சுயபுத்தியுள்ள எவரும் மறந்திருக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.