கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி சோதனை ; பெண் உட்பட ஐவர் கைது
சுமார் 7 கோடியே 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹஷீஷ் மற்றும் குஷ் போதைப்பொருள்களை கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இன்று அதிகாலை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 6 கிலோகிராம் ஹஷீஷ் மற்றும் 11 கிலோகிராம் குஷ் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றின் மொத்த பெறுமதி சுமார் 7 கோடியே 20 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் கேகாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.