இலங்கையர்களுக்கு எழுந்துள்ள சிக்கல் ; ஆள்மாறாட்டத்தில் அரங்கேறும் செயல் ; பின்னணியில் இந்தியர்களா?
அண்மைக்காலமாக வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் புதிய வகை வீடியோ அழைப்பு மோசடிகள் குறித்துப் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மோசடி நடவடிக்கைகள் இந்தியாவிலிருந்து இயங்கும் நபர்களால் முன்னெடுக்கப்படலாம் என அந்த நிறுவனம் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், இவ்வாறான மோசடிகளுக்கு உள்ளான பலர் ஏற்கனவே கப்பம் செலுத்தியுள்ளமை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வீடியோ அழைப்புகள்
இந்த மோசடிக்காரர்கள் இந்தியாவைச் சேர்ந்த அழகிய தோற்றம் கொண்ட யுவதிகளாக நடித்து, முதலில் போலி முகநூல் கணக்குகளின் ஊடாகத் தொடர்புகளை ஏற்படுத்திப் பயனாளர்களின் நண்பர்கள் பட்டியலைத் தமக்கு இணைத்துக் கொள்கின்றனர்.
அதன் பின்னர் வாட்ஸ்அப் இலக்கங்களுக்கு வீடியோ அழைப்புகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட நபர்களை கட்டாயப்படுத்துகின்றனர்.
இதனை மறுக்கும் பட்சத்தில், சில நிமிட வீடியோக்களைக் கொண்டு அவர்கள் மோசடிக்காரர்களுடன் தவறாக இருப்பது போன்ற போலி வீடியோக்களை உருவாக்கி, அவற்றை முகநூல் நண்பர்களுக்கும் ஏனைய சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதாக அச்சுறுத்துகின்றனர்.
இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் நபர்கள், சமூகத்தில் தமக்கு ஏற்படும் அவமானத்துக்குப் பயந்து இந்திய வங்கிக் கணக்குகளில் பெருமளவிலான பணத்தை வைப்பிலிடுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடிக்கு இலக்கானவர்களில் பிரபலமான பல நபர்களும் உள்ளடங்குவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும் நபர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்குமாறு அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.