இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் கொலை வழக்கு ; சட்டத்தரணி கண்டனம்
இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த நிலையில் கொல்லப்பட்டதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் இசைப்பிரியா (ஷோபா) மற்றும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் ஆகியோரது மரணங்கள் தொடர்பாக, தாம் சமர்ப்பித்த முறைப்பாட்டுக்கு எந்தவித பதிலும் இதுவரை வழங்கப்படவில்லை என சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், கடந்த ஜூன் 12ஆம் திகதி, இலங்கை காவல்துறை தலைமையகத்திற்கு அவரால் அதிகாரபூர்வ முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், இறுதிப்போரின்போது சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் கடுமையாக மீறப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளதுடன், குறிப்பிட்ட நபர்கள் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது முறைப்பாட்டுக்கு ஒரு மாதமாகியும் பதில் ஏதும் கிடைக்காததால், விரைவான நடவடிக்கையை எடுக்குமாறும், எழுத்துமூல பதிலை வழங்குமாறும் அவர் காவல்துறை மாஅதிபருக்கு கடிதம் வழியாக வலியுறுத்தியுள்ளார்.
தற்போது, அந்த முறைப்பாடு தொடர்பான கோப்பு இலக்கம் மட்டுமே பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 7 நாட்களுக்குள் பதில் வழங்கப்படாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கையாக அடிப்படை உரிமை மீறல் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் திட்டம் உள்ளதாகவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்களுக்கும் இந்த விடயம் அறிவிக்கப்படும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகேவின் முறைப்பாட்டின் முன்னேற்றம் தொடர்பில் பதிலளித்த காவல்துறை பேச்சாளர், முறைப்பாடுகள் தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ள எழுத்துமூல விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அது குறித்து காவல்துறை மாஅதிபருடன் கலந்துரையாடி அறியத்தரப்படும் என்று தெரிவித்தார்.