யாழ் அராலில் கடலில் மீட்கப்பட்ட சடலம்
யாழ்ப்பாணம், அராலி மேற்கு கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அராலி மத்தி, வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த செல்லையா சிவகுமார் (வயது 49) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் இன்றைய தினம் கடற்றொழிலுக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர், இன்று மதியம் 12.40 மணியளவில் அவர் கடலில் சடலமாக மிதப்பதை ஏனைய மீனவர்கள் அவதானித்துள்ளனர்.

உடனடியாக இது குறித்து அவரது உறவினர்களுக்கும், வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
சடலம் மீதான மரண விசாரணைகளை, திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.