இலங்கையில் மீண்டும் இயற்கையின் கோர தாண்டவமா? பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
மத்திய மலைநாட்டின் மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்ட புதிய வானிலை முன்னறிவிப்பில், சபரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்
வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் எனவும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடமத்திய, சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் மின்னல் தாக்கம் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.