திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
திருகோணமலை குச்சவெளி பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மீன்பிடிக் கப்பலை சோதனையிடச் சென்ற கடற்படைக் கப்பலைத் தாக்க பல படகுகளைக் கொண்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு முயன்றபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரும், தாக்குதலுக்கு இலக்கான இரண்டு கடற்படை வீரர்களும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விரிவான மற்றும் முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் படகுகளைக் கைப்பற்ற கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திருகோணமலை குச்சவெளி கடல் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் கடற்படைக் கப்பலால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த நேரத்தில், ஐந்து மீனவர்கள் சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்தி ஒரு டிங்கி படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர், கடற்படையினர் அவர்களைக் கைது செய்து கரைப் பகுதிக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்.
இருப்பினும், குறித்த சந்தர்ப்பத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களை ஏற்றிச் சென்ற பல கப்பல்கள் கடற்படைக் கப்பலைத் துரத்திச் சென்று மோதியதாகவும், இதனால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தப்பிச் சென்றதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படைக் கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள், எந்தவித இடையூறும் இல்லாமல் சட்டப்பூர்வமாக தங்கள் கடமைகளைச் செய்ய அனுமதிக்குமாறு அவர்களிடம் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழு தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு படகை கடத்திச் செல்ல முயன்ற போது, நிலைமையைக் கட்டுப்படுத்த கடற்படை அதிகாரிகள் வானத்தை நோக்கிச் சுட்டனர்.
கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்த ஒழுங்கமைக்கப்பட்ட குழு, கடற்படை வீரர்களுடன் சண்டடையிட்டு தாக்குவதற்கு முயற்சித்துள்ளனர். அங்கு, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் ஒருவர் கடற்படை வீரரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோது, அது வெடித்து, சம்பந்தப்பட்ட நபரைக் காயப்படுத்தியது.
சம்பவத்திற்குப் பிறகு ஒழுங்கமைக்கப்பட்ட குழு தப்பிச் சென்றது, கடற்படைக் குழு அவர்கள் கைது செய்த சந்தேகநபர்களுடன் கரைக்கு வந்தது.
காயமடைந்த 24 வயது மீனவர் சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உட்பட 5 மீனவர்களும் குச்சவெளி - ஜாயா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கப்பல் மீதான தாக்குதலில் காயமடைந்த இரண்டு கடற்படை வீரர்கள் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.
எனினும், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை குச்சவெளி பகுதியில் போராட்டமொன்று இடம்பெற்றது.
இந்த சம்பவம் குறித்து கடற்படை முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், பாதுகாப்பு செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் விரிவான மற்றும் முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கடற்படை ஊடகப் பணிப்பாளர் தெரிவித்தார்.
சட்டவிரோத மீன்பிடித்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் விளைவாக, இந்த ஆண்டு இதுவரை 117 மீன்பிடி படகுகளும் 315 நபர்களும் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (03) இரவு முன்னெடுத்த இவ்வாறான நடவடிக்கைகளில் 11 சட்டவிரோத படகுகளுடன் 48 நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.