செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரி யாழில் இன்று போராட்டம்
யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரிய ‘அணையா விளக்கு’ போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.
இன்று காலை 10.10 மணிக்குப் செம்மணி வளைவு அருகே அக வணக்கம், மலர் அஞ்சலி செலுத்தப்படும். தொடர்ந்து, நண்பகல் 12 மணிக்கு மனிதப் புதைகுழி கண்டறியப்பட்ட சித்துப்பாத்தி மயானத்தில் இருந்து போராட்டம் ஆரம்பமாகும்.
ஐ. நா. வதிவிடப் பிரதிநிதியின் பணிமனை
அங்கிருந்து, செம்மணி வீதி வழியாக மனித சங்கிலி முறைமையில் ஐ. நா. வதிவிடப் பிரதிநிதியின் பணிமனை வரையில் போராட்டம் நடைபெறும். அங்கு போராட்டக்காரர்களால் மனு கையளிக்கப்படும்.
இதனிடையே, மனித சங்கிலிப் பேரணி நீளும் வழியில் தியாகி திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்படும்.
இதேபோன்று, தமிழராய்ச்சி படுகொலை நினைவிடம், யாழ். நூலகம், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுச் சதுக்கம் ஆகிய இடங்களிலும் சுடர் ஏற்றப்பட்டு பின்னர், அணையா விளக்கு காற்றுடனும் நீருடனும் கலக்கப்படும்.
அதேவேளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இன்று(25) யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.
இதன்போது, அவர் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதுடன், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களையும் சந்திப்பார் என்றும் அறிய கிடைத்துள்ளது.