இலங்கை வான்படைக்கு அமெரிக்காவின் 10 ஹெலிகொப்டர்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைப்பு
அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட TH-57 சீ ரேஞ்சர் (TH-57 Sea Ranger) ரகத்தைச் சேர்ந்த 10 பல்பணி உலங்குவானூர்திகள், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நேற்றைய தினம்ரத்மலானை வான்படைத் தளத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ விழாவின் போது இலங்கை வான்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இலங்கை வான்படையின் விமானிப் பயிற்சித் திறன்களை மேம்படுத்துவதற்கும், அதன் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்துவதற்கும் இந்த உலங்குவானூர்திகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஒத்துழைப்பு
இந்த நிகழ்வின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், வான்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் அமெரிக்க பசுபிக் வான்படைத் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் ஆகியோரால் இருதரப்பு உடன்படிக்கையொன்று கையெழுத்திடப்பட்டது.

இந்த TH-57 சீ ரேஞ்சர் உலங்குவானூர்திகள் அனர்த்த நிவாரணம், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் அவசரகால பொதுச் சேவை நடவடிக்கைகள் உள்ளிட்ட பரந்த அளவிலான செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்பாதுகாப்புப் பணிகளுக்கான வான்படைப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் இவை பயன்படுத்தப்படவுள்ளன.
அமெரிக்காவில் இருந்து கடந்த முதலாம் திகதி விசேட சரக்கு விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்த உலங்குவானூர்திகள், ரத்மலானை வான்படைத் தளத்தின் வான் பொறியியல் பிரிவினரால் (Air Engineering Wing) ஒன்று சேர்க்கப்பட்டன.
உள்ளூர் செயல்பாட்டு நிலைமைகளுக்குப் பொருத்தமானவை என்பதை உறுதி செய்வதற்கான இறுதி தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் சோதனை ஓட்டங்களின் பின்னர் இவை முழுமையாகச் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.