மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு மயிலத்தமடு, மாதவனைப் பகுதிக்கு பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவினர் வழிமறித்து தடுத்து வைத்தனர்.
இச்சம்பவம் இன்றைய தினம் (22.08.2023) காலை வேளையில் மயிலத்தடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தில் காணி அபகரிப்பு மற்றும் விகாரை அமைப்பது தொடர்பாகவும் பண்ணையாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பலசமய மத தலைவர்கள் ஊடகவியலாளர்கள் கொண்ட குழுவினர் வாகனங்களில் சென்றனர்.
அங்கு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் பகல் 12 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தபோது, எல்லைபகுதியிலுள்ள கம்பி பாலத்தின் பகுதியில் பௌத்த தேரர் ஒருவருடன் அந்தபகுதி சிங்கள மக்கள் ஒன்றிணைந்து வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகனங்களின் திறப்புக்களை எடுத்து அவர்களை தடுத்து வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவர்களை மீட்பதற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தலைமையிலான பொலிஸார் அந்த பகுதிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.