நாட்டில் தானிய செய்கைக்கான காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்
நாட்டில் பயிர் செய்கையின் பாதிப்பை நிர்வகிக்கும் செயற்பாட்டை முறைமைப்படுத்தும் நோக்கில் தானிய செய்கைக்கான காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சினால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
உளுந்து, பச்சைப் பயறு, கௌப்பி, வேர்க்கடலை, குரக்கன், கொள்ளு, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு இந்த சலுகை காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கௌப்பி செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 4,200 ரூபாவை காப்பீடு மேற்கொள்ளும்போது, இயற்கை பேரழிவுகள், நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பு மற்றும் காட்டு யானைகளால் அந்த செய்கைக்கு ஏற்படும் சேதத்திற்கு ஒரு ஏக்கருக்கு 60,000 ரூபாய் காப்பீட்டை பெற்றுக்கொள்ளமுடியும்.
இதுதவிர பச்சைப்பயறு செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 5,600 ரூபாய் காப்பீடு செய்யும் போது, ஏற்படும் பாதிப்புகளுக்கு ஒரு ஏக்கருக்கு 80,000ரூபாய் இழப்பீடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
காட்டு யானைகளால் அச்சுறுத்தல் உள்ள மாவட்டங்களிலும் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கும் நோக்கில் இந்த மானிய காப்பீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.