ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்
ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தலைவர் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளமை போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்களிடையே சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு வருகைத்தர உள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
போரினால் நீதி மறுக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் போராடும் முன்னணியில் இருக்கும் தாய்மார்கள், அடுத்த ஜெனீவா மாநாட்டிற்குப் பின்னர் இந்தப் பயணம் இடம்பெற வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளனர்.
போரின் முடிவில் காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தலைவிதியை வெளிப்படுத்தக்கோரி, இலங்கையின் மிக நீண்ட போராட்டத்தின் 3,007ஆவது நாளில் முல்லைத்தீவில் திரண்ட போரால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள், உயர்ஸ்தானிகரின் வருகையை, தங்களுக்கு விசுவாசமான பிரதிநிதிகளைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட பயணம் என வர்ணித்துள்ளனர்.
முல்லைத்தீவில் நடந்த போராட்டத்தின் போது வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சனி, அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து சந்தேகங்களை எழுப்பியதோடு, போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதிக்கு சர்வதேச சக்திகள் ஆதரவளிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
"வரவிருக்கும் ஐ.நா தொடர் எங்களுக்கு ஒரு முக்கியமான தொடராக அமையவுள்ளது.
அந்த ஐ.நா தொடரிலே, இலங்கை அரசாங்கம் தமக்கு சார்பானவர்களை வைத்து ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதியை அழைத்து அவர்களோடு பேசுவதற்கு முயற்சிப்பாக நாங்கள் அறிகின்றோம்.
ஆகவே எங்களுடைய வலிகளையும், வேதனைகளையும் உணர்ந்துகொண்டு, மனிதநேயங்களை நேசிக்கின்ற அந்த நாடுகள் ஒன்றிணைந்து எங்களுக்கான சர்வதேச நீதியை பெற்றுத்தர, எங்களுடைய நீதியை பேச, எங்களுடைய பிரச்சினைகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுச் சென்று நீதியை பெற்றுத்தர, செயற்பட வேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்." செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு வருகை தரக்கூடாது என தாய் யோகராசா கனகரஞ்சனி மேலும் வலியுறுத்தினார்.