வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையை தென்னிலங்கை கட்சிக்கு விட்டுக் கொடுக்க தமிழரசுக் கட்சி இணக்கம்
செட்டிகுளம் பிரதேச சபையை தென்னிலங்கை கட்சிக்கு விட்டுக் கொடுப்பதற்கு தமிழரசுக் கட்சி இணக்கம் தெரிவித்துள்ளதுடன், தமிழ் தேசியப் பேரவையின் கூட்டணியில் உள்ள ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.
18 உறுப்பினர்களைக் கொண்ட வவுனியா, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி - 2,838 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்,
தேசிய மக்கள் சக்தி - 2,085 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் (போனஸ்-1),
இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 1,957 வாக்குகள் - 3 உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 1,661 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (போனஸ்-1),
சிறிலங்கா தொழிலாளர் கட்சி - 1,573 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (போனஸ்-2), ஜனநாயக தேசிய கூட்டணி - 1,225 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (போனஸ்-1),
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 626 வாக்குகள் - 1 உறுப்பினர் (போனஸ்-1),
சுயாதீன குழு 2 - 340 வாக்குகள் 1 உறுப்பினர் (போனஸ்-1) என பகிரப்பட்டுள்ளன.
இதில் 4 ஆசனங்களைக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, ஜனநாயக தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க தீர்மானித்துளள.
இதன்மூலம் 11 உறுப்பினர்கள் என்ற பெரும்பான்மை பலத்துடன் தென்னிலங்கையின் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கவுள்ளது. இச் சபையில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக தவிசாளர், பிரதி தவிசாளர் ஆகியோர் முஸ்லிம் பிரதிநிதிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, வவுனியா மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த இரு போனஸ் ஆசனமும், இரட்டைத் தொகுதியைக் கொண்ட ஒரே வட்டாரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த இரு முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து அக் கட்சியில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் அதிருப்தியில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது