'செனெஹசே கெதெல்ல' இல்ல தீ விபத்து குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்
அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள 'செனெஹசே கெதெல்ல' இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த இல்லத்தின் முறையற்ற மற்றும் பிரச்சினைகள் நிறைந்த நிலைமைகள் குறித்து பொறுப்பான பிரதேச செயலகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவர் ஆர். செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த இல்லத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மில்லனிய பிரதேச செயலாளர் பல சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுச் செயலகம், சமூக சேவைத் திணைக்களம் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி மில்லனிய பிரதேச செயலாளர் எழுத்துப்பூர்வமாக அறிவித்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இயங்கி வந்த இந்த நிறுவனம் ஆரம்பத்தில் மனநல பாதிப்புக்குள்ளான பெண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் மனநல பாதிப்புக்குள்ளான ஆண்களுக்கும் தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இல்லத்தை சுகாதார மற்றும் பாதுகாப்பு தரநிலைகளுக்கு ஏற்ப பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், பாதுகாப்பு வேலி இல்லாத காரணத்தால் அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்ற சம்பவங்கள் மற்றும் சில மரணங்களும் பதிவாகியிருந்ததாகவும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இல்லத்தின் நிலைமைகள் குறித்து தாமும் அதிகாரிகளும் அவ்வப்போது கண்காணிப்புகளை மேற்கொண்டு, அதனை சுகாதாரமான மற்றும் ஒழுங்கான முறையில் பராமரிக்குமாறும், கொள்ளளவை மீறி நபர்களை உள்வாங்க வேண்டாம் எனவும் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்த போதிலும், அவை பின்பற்றப்படவில்லை என பிரதேச செயலாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எந்தவொரு ஒழுங்குமுறை அல்லது கண்காணிப்பும் இன்றி மனநல குறைபாடுடைய நபர்களை பொறுப்பேற்று நடத்திவரும் இந்த இல்லம் தொடர்பில் உரிய சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மில்லனிய பிரதேச செயலாளர் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.