ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பரபரப்பு தகவலை வெளியிட்டவர் திடீர் தலைமறைவு!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முக்கிய தகவல்களை அண்மையில் அம்பலப்படுத்தியிருந்த முன்னாள் அமைச்சர் அமரர் ஒசீ அபேகுணசேகரவின் மகனும் தேசிய பாதுகாப்பு பற்றிய ஆய்வுப் பணியகத்தின் முன்னாள் தலைவரான சட்டத்தரணியுமான அசங்க அபேகுணசேகர திடீரென நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைத்தள நிகழ்ச்சி ஒன்றில் கடந்த 09ஆம் திகதி பங்கேற்றிருந்த சட்டத்தரணி அசங்க அபேகுணசேகர நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் பற்றிய பல விடயங்களை வெளியிட்டிருந்தார்.
குறிப்பாக, அரச புலனாய்வுப்பிரிவு முன்னாள் தலைவராகிய நிலந்த ஜயவர்தன தாக்குதல் தொடர்பில் பல விடயங்களை மூடிமறைத்ததாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
மேலும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் இருந்த அந்நாட்டைச் சேர்ந்த பிரபல புலனாய்வுப்பிரிவு அதிகாரி ஒருவர் தாக்குதல் இடம்பெற்ற அன்றைய தினத்தில் காலை 6.30 அளவில் தொலைபேசி ஊடாக நிலந்த ஜயவர்தனவுடன் தொடர்புகொண்டு, “இன்றுதான் தாக்குதல் நடத்தப்போகின்ற தினம்” என்பதைத் தெரிவித்து எச்சரித்திருந்ததாகவும் அந்த நேர்காணலின்போது அசங்க அபேகுணசேகர கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே அவர் நேர்காணலை வழங்கிய தினத்தன்று மாலையில் அமெரிக்கா சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.