உலக பொருளாதாரத்தின் புதிய மையமாக இந்தியப் பெருங்கடல் ; சிங்கப்பூரில் நாமல் ராஜபக்ச வலியுறுத்தல்
ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் முக்கிய பொருளாதார மற்றும் மூலோபாய மையமாக இலங்கை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற Global Economic Cooperation, East Summit மாநாட்டில் உரையாற்றிய அவர், உலகம் தற்போது "இந்தியப் பெருங்கடல் நூற்றாண்டை" நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்தியப் பெருங்கடல் பகுதி ஒரு முக்கிய தசாப்தத்தை மட்டுமல்ல, அதன் பொருளாதார மற்றும் மூலோபாய முக்கியத்துவத்தால் வரையறுக்கப்படும் ஒரு புதிய நூற்றாண்டிற்குள் நுழைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மில்கன் நிறுவகத்தின் மூத்த ஆய்வாளர்கள் குழுத் தலைவர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் கர்டிஸ் எஸ். சின் உடன் இணைந்து நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற நாமல் ராஜபக்ச, பிராந்திய இணைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில் இலங்கையின் பங்கு குறித்த தனது பார்வையைப் பகிர்ந்துகொண்டார்.
இலங்கை, முக்கிய பிராந்தியங்களை இணைக்கும் நம்பகமான பாலமாக உருவெடுப்பதுடன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் தொழில்முனைவோர் முயற்சிகள் மூலம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
"பல நூற்றாண்டுகளாக இந்தியப் பெருங்கடல் நாகரிகங்களை இணைத்து வந்துள்ளது. இனி அது எதிர்காலத்தையும் இணைக்க வேண்டும்" எனத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, வேகமாக மாறிவரும் உலக பொருளாதார சூழலில் அடுத்த தலைமுறையை வழிநடத்தத் தயார்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.