தான் தூக்கிய குழந்தையே தனக்கு எதிராக களமிறங்கும் என மெஸ்ஸி நினைத்திருப்பாரா?
கால்பந்து வரலாற்றில் மிகவும் அரிதான மற்றும் எதிர்பாராத சம்பவங்களில் ஒன்றாக, உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி தனது இளம் வயதில் தூக்கிய குழந்தை இன்று அவருக்கே எதிராக களமிறங்கும் நிலை உருவாகியுள்ளது.
2007 ஆம் ஆண்டு 20 வயதான லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனாவின் கேம்ப் நௌ மைதானத்தில் நடைபெற்ற ஒரு தொண்டு நிகழ்வின் போது ஐந்து மாத குழந்தையான லமின் யமாலை கைகளில் தூக்கி புகைப்படம் எடுத்த சம்பவம் தற்போது மீண்டும் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.
அந்த புகைப்படங்கள் உண்மையானவை எனவும், அவை 2008 ஆம் ஆண்டுக்கான தொண்டு நாட்காட்டி ஒன்றுக்காக எடுக்கப்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் ஸ்பெயின் செய்தித்தாளான டயாரியோ ஸ்போர்ட், யுனிசெஃப் (UNICEF) உடன் இணைந்து இந்த தொண்டு முயற்சியை முன்னெடுத்திருந்தது. நிதி திரட்டும் நோக்கில் பார்சிலோனா முதல் அணியின் வீரர்களை உள்ளூர் குழந்தைகளுடன் இணைத்து புகைப்பட அமர்வு நடத்தப்பட்டது.
அந்த நிகழ்வில் பங்கேற்க லமின் யமாலின் குடும்பமும் வாய்ப்பு பெற்றது. மியாட்டரோவின் ரோகாஃபோண்டா பகுதியைச் சேர்ந்த யமாலின் குடும்பம், சீரற்ற முறையில் நடைபெற்ற தெரிவு முறையின் மூலம் இந்த வாய்ப்பைப் பெற்றதாக கூறப்படுகிறது.
அப்போது ஐந்து மாத குழந்தையாக இருந்த லமின் யமால், எதிர்பாராத விதமாக மெஸ்ஸியுடன் இணைக்கப்பட்டார். அந்த நேரத்தில் இளம் வீரராக இருந்த மெஸ்ஸிக்கு குழந்தையுடன் எவ்வாறு பழகுவது என்பது தெரியாமல் சற்று தயக்கமாக இருந்ததாக புகைப்படக் கலைஞர் ஜோன் மான்ஃபோர்ட் பின்னர் தெரிவித்திருந்தார்.
மெஸ்ஸி அப்போது மிகவும் அமைதியான மற்றும் கூச்ச சுபாவமுடையவராக இருந்ததாகவும், குழந்தையை எவ்வாறு தூக்குவது என்பது குறித்து ஆரம்பத்தில் தயக்கம் காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் யமாலின் தாயார் ஷீலா எபானா உதவி செய்து அந்த தருணத்தை எளிதாக்கியுள்ளார். காலப்போக்கில் அந்த புகைப்படங்கள் அதிகம் கவனிக்கப்படாமல் இருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து தொடரின் போது அவை மீண்டும் சமூக ஊடகங்களில் வைரலானது.
லமின் யமாலின் தந்தை மௌனீர் நஸ்ராவி, அந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, "இரண்டு ஜாம்பவான்களின் தொடக்கம்" என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.
அதன் பின்னர் ரசிகர்கள், மெஸ்ஸி அப்போது அந்தக் குழந்தைக்கு தனது கால்பந்து திறமையின் "ஆசீர்வாதத்தை" வழங்கியதாக நகைச்சுவையாக கருத்துகளை பகிர்ந்து வந்தனர்.
இன்று ஸ்பெயின் அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ள லமின் யமால், தனது இளம் வயதிலேயே உலக கால்பந்து அரங்கில் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளார்.
மறுபுறம், அர்ஜென்டினா அணியை வழிநடத்திய லியோனல் மெஸ்ஸி கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ஒரு காலத்தில் மெஸ்ஸியின் கைகளில் இருந்த குழந்தை, பல ஆண்டுகளுக்குப் பின்னர் அதே கால்பந்து மேடையில் அவருக்கு எதிரான போட்டியாளராக நிற்பது, விளையாட்டு உலகின் மறக்க முடியாத சுவாரஸ்யமான கதைகளில் ஒன்றாக மாறியுள்ளது.