வாகனங்களை இறக்குமதி செய்ய தயங்கும் இறக்குமதியாளர்கள்
இலங்கையில் வாகன இறக்குமதி செய்யக்கூடிய இறக்குமதியாளர்கள், தற்போது வாகன இறக்குமதிக்கு தயக்கம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், பெருமளவில் வாகனங்களை இறக்குமதி செய்வதில் இறக்குமதியாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வாகன இறக்குமதிகளின்போதான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் வாகனங்களுக்கான வரி விதிப்பு போன்ற காரணிகளினால் இவ்வாறு இறக்குமதியாளர்கள் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக கொள்வனவாளர்களை தேடிக்கொள்வதில் நிலவும் சிரமங்களினால் வாகன இறக்குமதி மந்த கதியில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், வாகனம் தேவைப்படுவோர் முன்பதிவு செய்வதன் அடிப்படையில் தற்பொழுது வாகன இறக்குமதியாளர்கள் வாகனங்களை வரையறுக்கப்பட்ட அடிப்படையில் இறக்குமதி செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இறக்குமதியாளர்கள் ஊடாக வாகனம் கொள்வனவு செய்யப்படும் போது கொள்வனவு செய்வோர் மீது மேலதிக வரி விதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் வாகனங்களின் விலைகள் அதிகரிப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளதுடன், பெரிய வாகன இறக்குமதி நிறுவனங்கள் கூட முன்பதிவு அடிப்படையில் மட்டும் வாகனங்களை இறக்குமதி செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.