எரிபொருள் QR முறைமை; வௌியானது புதிய அறிவிப்பு
நாட்டில் எரிபொருளை விநியோகிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள QR ஒதுக்கீட்டு நடைமுறையை இந்தத் தருணத்தில் நீக்குவதற்கு எவ்வித முடிவும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிபொருளுக்கான ஸ்திரத்தன்மை இன்னமும் இல்லாமை காரணமாக, எரிபொருள் QR நடைமுறையை மேலும் தொடரவுள்ளதாக , இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாப முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

டொலர் இருப்பும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்
QR நடைமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் மாத்திரமன்றி டொலர் இருப்பும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மீண்டும் மத்திய கிழக்கில் யுத்த நிலைமை தீவிரமடைந்தால் நாட்டில் எரிபொருள் வரிசைகள் ஏற்படுவதையும், அதன் மூலம் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதையும் தடுப்பதற்காக QR நடைமுறையைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறினார்.
அத்துடன், வளைகுடா யுத்த நிலைமை காரணமாக நாட்டின் எரிபொருள் விநியோகக் கட்டமைப்புக்கு இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், எரிபொருள் சந்தையில் விலைகள் மீண்டும் அதிகரிக்குமா என்பது குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.