அரிய வானியல் நிகழ்வு ; அடுத்த சூரிய கிரகணங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு
வானியல் அதிசயங்களில் ஒன்றான முழு சூரிய கிரகணம், சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 2026 ஆகஸ்ட் 12ஆம் திகதி நிகழவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வானியல் நிகழ்வுக்காக உலக வானியல் ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு வந்து, சூரியனின் ஒளி பூமியின் சில பகுதிகளில் விழாமல் தடுக்கும் நிகழ்வே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.
இம்முறை நடைபெறவுள்ள முழு சூரிய கிரகணத்தின் போது க்ரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு ஸ்பெயின் மற்றும் வடகிழக்கு போர்ச்சுகல் உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக இருளில் மூழ்கும் என கூறப்படுகிறது.

அங்கு பகல் நேரத்திலேயே சூரியன் முற்றிலும் மறையும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் சில பகுதிகளில் பகுதிநேர சூரிய கிரகணம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஏப்ரல் மாதம் மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் முழு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அதேபோல், ஸ்பெயினில் 1905ஆம் ஆண்டுக்குப் பிறகு இம்முறை மீண்டும் முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கிரகணம் இந்தியாவில் இருந்து நேரடியாகக் காண முடியாது எனவும், எனினும் நாசா உள்ளிட்ட அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் நேரலை வாயிலாகக் காண முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த முழு சூரிய கிரகணம் 2027 ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளதாகவும், அது ஸ்பெயின், வடக்கு ஆப்ரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஏமன் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே தென்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 2033 மார்ச் 30 வரை முழு சூரிய கிரகணம் காண வாய்ப்பு இல்லையெனவும், அன்றும் சில பகுதிகளில் மட்டுமே தென்படும் எனவும் தரவுகள் குறிப்பிடுகின்றன. முழு அமெரிக்காவிலும் முழு சூரிய கிரகணம் காண 2044ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
வானியல் நிபுணர்கள், முழு சூரிய கிரகணத்தை வெறுங்கண்களால் நேரடியாகப் பார்ப்பது ஆபத்தானது என எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக கிரகணத்தின் போது சூரியன் பகுதியளவில் வெளிப்படும் நேரத்தில் அதிக ஒளி கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், உரிய பாதுகாப்பு கருவிகள் இல்லாமல் பார்வையிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.